திருவாசகம்: சிவபுராணம் பாடல் வரிகள்

05 Mar, 2025 06:53 AM
thiruvasakam-shiva-puranam-song-lyrics-in-tamil

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் முதற் பகுதியான சிவபுராணம் பாடல் வரிகள்:

சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும், பெருமைகளையும் விளக்குகிறது சிவபுராணம். அத்துடன் உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை உலகுக்கு சொல்லியுள்ளார் மாணிக்கவாசகர்.

சிவபுராணம்:

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே-எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் எனும் தேன்.

– திருச்சிற்றம்பலம்


திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது (தற்சிறப்புப் பாயிரம்) :

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! (5)

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! (10)

ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர்ஆர் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி! (15)

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பான் யான் (20)

கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி,
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்கா விளங்கு ஒளியாய்
எண் ணிறந்து எல்லை இலாதானே! நின் பெருஞ்சீர்,
பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்று அறியேன்; (25)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பு ஆகி
கல்லாய், மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள், (30)

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!
மெய்யே! உன் பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
ஐயா! என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று, நுண்ணியனே! (35)

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போயகல, வந்து அருளி,
மெய்ஞ்ஞானமாகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! (40)

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்,
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்!
நாற்றத்தின் நேரியாய், சேயாய்! நணியானே!
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே! (45)

கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த!
மறைந்திருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை (50)

மறைந்திட மூடிய மாய இருளை,
அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலஞ் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய (55)

விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன்மேல் வந்து அருளி, நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு, (60)

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!
நேசம் அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)

பேராது நின்ற பெருங் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! (70)

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய், அல்லையும் ஆம்
சோதியனே! துன் இருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுவு ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)

நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே!
ஆற்றின்ப வெள்ளமே! அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய். சொல்லாத நுண் உணர்வாய், (80)

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்! “எம் ஐயா”, “அரனே ஓ” என்று என்று (85)

போற்றிப் புகழ்ந்து இருந்து! பொய் கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து!, வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அளிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! (90)

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று!
சொல்லற்கு அரியானைச் சொல்லித், திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர்! சிவபுரத்தின் உள்ளார்! சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)

– திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணாரமுத கடலே போற்றி
காவாய் கனகத்திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாசகம் குறிப்பு:

சைவ சமய முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, 9-ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே திருவாசகம் எனும் தேன்.

பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது திருவாசகம். பக்தியும், மனதை உருக்கும் வசீகர குணமும் கொண்ட திருவாசகப் பாடல்களை "திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்ற மூதுரை மூலம் அதன் பெருமையை ஒரே வரியில் அறியலாம்.

திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களில் மொத்தம் 658 பாடல்கள் உள்ளன. 38 சிவத்தலங்கள் இந்நூலில் பாடப்பட்டுள்ளது. திருவாசகம் நான்கு பெரும் பகுதிகளை கொண்டுள்ளது. அது,

1. சிவபுராணம்,
2. கீர்த்தித் திருவகவல்,
3. திருவண்டப்பகுதி,
4. போற்றித் திருவகவல்

இதைத்தொடர்ந்து, திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டுள்ளது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன.

சிவபுராணம்:

திருவாசகத்தின் முதற் பகுதியான சிவபுராணம், சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும், பெருமைகளையும் விளக்குகிறது. அத்துடன் உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை உலகுக்கு சொல்லியுள்ளார் மாணிக்கவாசகர்.

அவனின்றி அணுவும் அசையாது என்ற அடிப்படையில், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" முன் செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் தீர, உள்ளம் மகிழும் வகையில் சிவபுராணத்தைக் பாடுகிறேன் என்று மாணிக்கவாசகரே சிவபுராணத்திற்கான நோக்கத்தை தெளிவாக விளக்கியுள்ளார்.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர்! சிவபுரத்தின் உள்ளார்! சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து."

- என்ற மாணிக்கவாசகரின் கூற்றுப்படி, தினமும் சைவபுராணத்தை பாராயணம் செய்து சிவனுடன் கலப்போமாக!!!.

– திருச்சிற்றம்பலம்

Tags:

#சிவபுராணம் #சிவபுராணம் பாடல் வரிகள் #திருவாசகம் #Shiva Puranam Song Lyrics in Tamil #சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில்

Trending now

We @ Social Media